உலகம்
ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர்
ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர்
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது, ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தரையில் பதுங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தாக்குதல் 13ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினருடனான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்த நாட்டிற்கு சென்று இருந்த ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் கடந்த 17ம் திகதி நாடு திரும்புவதற்காக இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பபட்டது.
இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பிறகு அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டுள்ளார்.