பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும் 2020ம் ஆண்டின் வெப்ப சாதனைகளை சுலபமாக முறியடித்து, இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 8 முறை இங்கிலாந்தின் வெப்பம் 34°C-ஐ தொட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல நீர் வழங்கல் நிறுவனங்கள் மிக கடுமையான கட்டுப்பாட்டை அறிவித்து, பிரித்தானியாவில் வறட்சி ஏற்படாமல் தடுக்க போராடி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு நீர் வழங்கல் நிறுவனங்கள், தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கவும், கையிருப்பில் இருக்கும் தண்ணீரை பாதுகாக்கவும் தண்ணீர் பயன்பாட்டிற்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
நிலவி வரும் அதிகப்படியான வெப்பம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்து இருப்பதால், பல நீர் வழங்கல் நிறுவனங்கள் தற்காலிகமாக குழாய்கள் மூலமாக தண்ணீர் பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.
டெவோன், கார்ன்வால் மற்றும் ஈஸ்ட் ஆங்க்லியா என குறிப்பிட்ட பகுதிகளில் வறட்சி ஏற்படும் அபாயம் குறித்தும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், பெரும்பாலான இந்த புதிய கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.