சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான நேரத்தில் எரிவாயு , கோதுமை மா ஆகியவற்றுக்காக அலைந்து திரிய வேண்டியுள்ளதாகவும், இரவில் மின்வெட்டு காரணமாக ஹோட்டல், பேக்கரிகள் இயங்க முடியாதுள்ளதாகவும் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சாரத் துண்டிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் பேக்கரி கடை நடத்த முடியாதுள்ளதாகவும் கடை வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்க்கமான முடிவை காணாவிட்டால் தமது வர்த்தகத்தை நிரந்தரமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews