திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக சாஸ்திரி நகர் காவல்துறையினர் அவரை கைது செய்த நிலையில், காவல்நிலைய பிணையில் உடனடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில், காந்தி நகரில் குறித்த வங்கிக் கிளை இயங்கி வருகிறது.
குறித்த கட்டிடத்தில் இருந்த மின்தூக்கி நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், அதை சீரமைக்கும்படி கட்டட உரிமையாளரான கயல்விழியை வங்கி நிர்வாகம் பலமுறை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், கயல்விழி தரப்பு குறித்த மின்தூக்கியை சரி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வங்கிக் கிளை முகாமையாளர் நேரடியாக கட்டட உரிமையாளரான கயல்விழியிடம் பேசியபோது, ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி முகாமையாளரின் கன்னத்தில் அறைந்ததாக முறையிடப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று காவல்நிலையத்துக்கு வந்த கயல்விழியை கைது செய்து விசாரணையின் பின்னர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.