நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியுமென, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றிலே முன்வைக்கப்பட வரவு செலவுத்திட்டம் என்றவகையிலே இம்முறையே விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள அத்தனை பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுக்கும் இந்த நிதி சமமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு வட கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கின்றது.
எங்களுக்கு உரிமை கிடைத்தால் போதும் அதன் பின்னர் எல்லாம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் வளர்ச்சி என்பது எல்லா வகையிலும் நமக்கு கிடைக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சரியான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை. நான் உட்பட 16 பேர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தோம்.
ஆனால் எதுவுமே நடக்கவில்லை. நீண்ட காலத் தீர்வு விடயங்களிலும் நாம் சாதிக்கவில்லை. அபிவிருத்தி விடயங்களையும் நாம் பெற்றுக் கொடுக்கவில்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
#SrilankaNews
Leave a comment