ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி கடந்த 6 நாட்களாக காலி முகத்திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இளைஞர், யுவதிகள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள், சமூக நலன் விரும்பிகள் என அனைத்து மக்களும், இன, மத, மொழி கடந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி செயலகம் முன்பாக தினமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆர்ப்பட்டத்தில் பங்குபற்றுவோர் தங்குவதற்கென காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் என தேவையான உதவிகளும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
நேற்று தமிழ் – சிங்கள புத்தாண்டு நாளிலும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றது. போராட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதுடன் பலகாரங்களும் வழங்கப்பட்டன.
‘கோட்டா கோ கம’ என்னும் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில், 7 ஆவது நாளாக அரசுக்கெதிரான கோஷங்களுடன் இன்றும் போராட்டம் தொடர்கிறது.
#SriLankaNews
Leave a comment