மக்களின் உள்ளாடைகளைக் கழற்ற முயற்சிக்கின்றது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாரத்தில் படிபடியாகக் குறைவதைக் காண்கின்றோம். தொற்றாளர் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையையும் குறைவாகக்காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் சுமார் 20 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் நாளொன்றுக்கு நடத்தப்பட்டன. அண்மைய நாள்களில் இந்த எண்ணிக்கை பாதியளவில் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம் நாட்டைத் திறக்க வேண்டும் என்ற செய்தியைப் பரப்ப முயற்சிக்கப்படுகின்றது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டு மக்களிடம் பொய்யான தரவுகளைக் கூற வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாமையாலேயே விசேட வைத்தியர்களான ஆனந்த விஜயவிக்ரம, அசோக குணரத்தின ஆகியோர் குழுவிலிருந்து விலகுகின்றனர் என்று தெரிவித்த ஹர்ஷன ராஜகருணா அரசு நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் பேரில் அன்றித் தனித்துச் செயற்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் ரூபாவின் பெறுமதியைப் பராமரிக்க நேற்று ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கான தீர்வாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசியை அத்தியாவசியமற்ற பொருளா? என்ற கேள்வி எழுகின்றது என்று தெரிவித்த ஹர்ஷன ராஜகருணா, இந்த அரசு மக்களின் உள்ளாடைகளையும் கழற்றுவதற்கு முயற்சிக்கின்றது என்று கூறினார்.
மக்களுக்கு முன்னுரிமையுள்ள விடயங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரு நாள்கள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கறுப்புப் பண சட்டவரைபை நிறைவேற்றும் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இது முன்னுரிமைக்குரிய விடயம் அல்ல. மக்கள் அத்தியாவசிய பொருள்களின் விலைகளால் திண்டாடுகின்றனர் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் தொடர்பாக முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கான தலைவர் சஜித் பிரேமதாச. அவரைச் சுற்றியுள்ள நண்பர்களுக்காக தீர்மானம் எடுப்பவர் அல்லர். அவரைச் சுற்றியுள்ள மோசடிகளுக்காரர்களுக்கு சார்பாக முடிவெடுப்பவர் அல்லர். இளைஞர்களாக நாங்கள் எங்கள் பூரண ஒத்துழைப்பை அவருக்கு வழங்குவோம் என்றும் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
Leave a comment