ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய நபர்!
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை முன்னிறுத்துமாறு அக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அந்தத் தேர்தலில் பசில் ராஜபக்ஷ போட்டியிட்டால், அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், பசில் ராஜபக்ஷவும் அந்த விடயத்தை தற்போது பரிசீலித்து வருவதாகவும் அறியமுடிகிறது.
இதன்படி, பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து தேசியப்பட்டியல் எம்பியாக நாடாளுமன்றத்திற்கு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இருந்து பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட தனது தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, பசில் ராஜபக்ஷவுக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.
இந்த வருடம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஜயந்த கடகொட தனது தேசியப்பட்டியல் எம்.பி ஆசனத்தை வழங்க தயாராக இருப்பதாகவும், அவர் தவிர மேலும் பல பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட மற்றும் பலம் வாய்ந்த உறுப்பினர்கள் கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் பல சுற்று விசேட கலந்துரையாடல்களை நடாத்தியதாகவும், இந்த விடயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஒருவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது கட்சி தற்போது இரு வேட்பாளர்களை பரிசீலித்து வருவதாகவும் அவர்களில் ஒருவர் பொருளாதாரம் தொடர்பில் நன்கு அறிந்தவர் எனவும் மற்றையவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கக் கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார்.
பேராசிரியரின் கருத்துப்படி, பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர் என்ற வகையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே இருக்கலாம் என, கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் கட்சியில் மேலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கமைய இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அறியமுடிகின்றது.
Leave a comment