கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுமார் 70 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீ பிரதாபன், பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தற்போதுவரை எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பில் உள்ள அழகியல் கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் 71 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமையினை உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களில் 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவ்வாறு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதோடு, கல்விச் செயற்பாடுகள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்வதை நோக்கமாகக்கொண்டு, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், நாளை முதல் ஒரு வார காலத்திற்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒன்லைன் முறைகளில் முன்னெடுக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.