Ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச வர்த்தக அலுவலகம் விரைவில்

Share

சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆண்டாகும் போது வறுமை இல்லா, வளமான நாடாக இலங்கை உருவாக வேண்டும். அத்துடன், வர்த்தக ஒருங்கிணைப்பே இந்தியாவுடனான இலங்கையின் உறவைத் தீர்மானிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

1946 இல், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் முதலாவது ஆசிய உறவுகள் தொடர்பான மாநாடு நடந்தது. இது ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க வழிவகுத்தது. பின்னர் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு ஒன்றிணைய அது வழிவகுத்தது. அதற்கமைய ஏனைய நாடுகளின் பிரதானியாக இந்தியா இருக்கிறது.

இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆசியாவின் மூன்று முக்கிய சக்திகள்.

இந்தியாவைப் பற்றி பேசும் போது இரண்டு பேரை மனதில் கொள்ள வேண்டும். மாநிலங்களை ஒருங்கிணைத்த பிரதிப் பிரதமர் வல்லபாய் படேல் மற்றும் இந்தியா என்ற தனித்துவத்தை ஏற்படுத்திய ஐவஹர்லால் நேரு ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இந்திய தேசியக் கொடியில் இருக்கும் அசோக சக்கரம் இந்தியாவின் வெற்றியை காட்டுகிறது. அசோக சக்கரவர்த்தியின் கீழ் பௌத்த சமயம் இலங்கைக்கு வந்தது. இலங்கைச் சமூகத்தின் ஆரம்பம் எவ்வாறு அமைந்தது என்பதை இந்திய தேசியக் கொடி பிரதிபலிக்கிறது.

இந்தியா, வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவிலிருந்து பல பழக்கவழக்கங்கள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இருந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான சிங்கள மக்கள், ராகு காலத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நம்பிக்கை கேரளாவில் இருந்து வந்ததாகும். கேரளாவைச் சேர்ந்த பத்தினி தேவியை நாம் இங்கு வணங்குகின்றோம். இங்கு பௌத்தர்களும் இந்துக்களும் அல்லாத ஏராளமான மக்கள் வாழ்கிறார்கள். தென்னிந்தியாவில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து முஸ்லிம்களாக மாறிய இளைஞர்கள் இங்கு உள்ளனர்.

உபகண்டமாக இந்தியா, இலங்கை மீது செலுத்தும் செல்வாக்கை இது காட்டுகிறது. இரு நாடுகளும் ஆறுமாத இடைவெளியில் சுதந்திரம் பெற்றன. எங்களுக்கு பொதுவான கலாசார, பாரம்பரியங்கள் உள்ளன. மதம், கலாசாரம், நடனம் போன்றவை பொதுவானவையாக காணப்படுகின்றன. இதேபோன்று இருநாடுகளுக்கும் இடையில் வேறுபாடுகளும் உள்ளன. நாங்கள் அந்த வேறுபாடுகளின் ஊடாகவே உருவாகியுள்ளோம்.

இந்த நவீன யுகத்தில் ஜனநாயகம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகும். எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த கிரிக்கெட் விளையாட்டை எமக்குத் தந்த பிரித்தானியாவிற்கு நன்றி கூறவேண்டும். பொலிவுட்டை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூற வேண்டும். இவையே நம்மை ஒன்றிணைத்துள்ள புதிய விடயங்களாகும். அதனால்தான் எமக்கிடையில் இருப்பது இருதரப்பு உறவு மட்டுமல்ல என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன். இந்த உறவு அதையும் தாண்டியது.

ரவீந்திரநாத் தாகூரின் மாணவர் தான் எமது தேசிய கீதத்தை இயற்றினார். அவர் நம் அனைவருக்கும் சொந்தமானவர். ரவீந்திரநாத் தாகூர் இலங்கைக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தைப் பற்றி எனது தாயார் சொல்லியிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூருடன் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் இருந்த பலரின் செல்வாக்கை நாம் பெற்றிருக்கிறோம். நாம் அந்த உபகண்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டோம். தென்னிந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு வட இந்தியாவின் சில பகுதிகளை விட இலங்கையின் சில பகுதிகளே நன்கு பரிச்சயமாகவுள்ளது. ” – என்றார்.

இலங்கை இந்திய சமூகத்தில் சுமார் 800 இற்கும் மேற்பட்ட இலங்கை இந்தியப் பிரஜைகள் வாழ்நாள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இச்சங்கம் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.

முதல் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லே, இந்திய இலங்கை சங்கத்தின் தலைவர் கிஷோர் ரெட்டி, ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...