அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகைகளை மேலும் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் அமெரிக்க ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இலங்கை மக்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரும் நிவாரணம் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தான் தூதுவர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு நாட்டிற்குத் திரும்பினாலும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூதுவர் பதவியில் மேலும் நீடிக்குமாறு அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தற்போதைய அரசாங்கத்துடன் தான் மிகவும் சுமுகமாகப் பணியாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.