இந்தியா
புத்தாண்டு தேநீர் விருந்து! – தமிழக கட்சிகள் புறக்கணிப்பு
புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழக கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த அழைப்பை தமிழக கட்சிகள் நிராகரித்துள்ளன.
இது தொடர்பில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில்,
ஆளுநர் தரப்பு அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக முயன்று வருகிறது. மக்கள் கோரிக்கைகளை கவனத்தில் எடுப்பதில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. இந்த நிலையில், நாம் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவிக்கையில்,
தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து தமிழக ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாகவே செயற்பட்டு வருகிறார். இவ்வாறான நிலையில் மனிதநேய மக்கள் கட்சி இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது – என்றார்.
அத்துடன், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழர்களின் உணர்வை அவமதித்து விட்டு விருந்துக்கு அழைப்பது கேலிக் கூத்தாக உள்ளது என தெரிவித்துள்ள நிலையில், தேநீர் விருந்தில் பங்காளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login