தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவை மீண்டும் தடைபட்டியலில் சேர்க்கப்படும் – என்று ஆளுங் கூட்டணியின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்றது.
இதன்போது சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள்மீதான தடை நீக்கம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சி எம்பியான ஜகத் குமார இவ்வாறு குறிப்பிட்டார்.
” உரிய ஆய்வுகளின் பின்னரே, சில அமைப்புகள் மற்றும் நபர்களை தடை பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ளது. இதில் எவ்வித தவறும் கிடையாது. நாம் உலகுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.
தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம்.
சிலவேளை, அவ்வமைப்புகள் எமது நாட்டுக்கு, சட்டத்துக்கு எதிராக செயற்பட்டால் மீண்டும் தடை செய்ய முடியும். அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.” – எனவும் ஜகத் குமார எம்.பி. சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
Leave a comment