இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக திருவனந்தபுரம் வந்த அவர், விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.
“இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை,”
எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
“இலங்கையில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது.
கடுமையான நெருக்கடி நிலவும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இந்த சூழலை இலங்கையர்களால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
#IndiaNews
Leave a comment