இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி கடத்த முயற்சித்த சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இந்த இலங்கை குடும்பத்தினர் ஆரம்பத்தில் தங்களது சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் தரைமார்க்கமாக மலேசியாவுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்து வந்துள்ளனர்.
அவர்கள், 2 பிள்ளைகளுக்கு தான் தாய் என்று பொய்யான தகவல்களை கூறிக்கொண்டு மலேசியப் பெண் ஒருவருடன் கஜகஸ்தான் செல்ல முயற்சித்துள்ளனர்.
இருப்பினும், அவர்களது பயண ஆவணங்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்த விமான சேவை அதிகாரிகள், அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதன் காரணமாக தங்களது பயணத் திட்டத்தை மியான்மருக்கு மாற்றியுள்ளனர், இது குறித்து குடிவரவு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டனர்.
மியான்மரிலிருந்து டொன் முவாங் சர்வதேச விமான நிலையம் வழியாக கஜகஸ்தான் செல்ல முயன்ற போது, தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தலையிட்டு அவர்களைக் கைது செய்தனர்.
இலங்கை பெண்ணும் மூத்த பிள்ளைகளும் மற்றவர்களுக்கு சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதும், இளைய பிள்ளை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.