உலகம்
இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கிய சரக்கு கப்பல் தொடர்பில் புதிய தகவல்
இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கிய சரக்கு கப்பல் தொடர்பில் புதிய தகவல்
அவுஸ்திரேலியாவில் இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கியுள்ள சரக்கு கப்பலில் இருந்து மொத்த ஆடு மாடுகளையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் எதிர்வரும் வாரங்களில் இன்னொரு கப்பலில் அந்த ஆடு மாடுகளை அடைத்து இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MV Bahijah என்ற அந்த சரக்கு கப்பலில் 16,000 ஆடு, மாடுகள் ஏற்றப்பட்டு சுமார் நான்கு வாரங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் அந்த மிருகங்களை நடத்தும் விதம் கொடூரமானது என்று ஆர்வலர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
ஜனவரி 5ம் திகதி இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் அந்த கப்பல் புறப்பட்டுள்ளது. ஆனால் ஹவுதிகள் செங்கடல் பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருவதை குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் கப்பலை திரும்ப அழைத்துள்ளனர்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வெப்ப அலை வீசி வரும் சூழலில், அந்த கப்பல் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது. இதனிடையே, சில விலங்குகளை இறக்கி விட்டு, மீதமுள்ளவற்றை ஆப்ரிக்காவைச் சுற்றி, சுமார் 33 நாட்கள் பயணித்து இஸ்ரேலுக்கு அனுப்ப அனுமதிக்குமாறு ஏற்றுமதியாளரின் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் திங்களன்று மறுத்துள்ளது.
ஆனால் தற்போது விலங்கு நல ஆர்வலர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, அந்த கப்பலில் இருந்து மொத்த விலங்குகளையும் வெலியேற்றி, உரிய பரிசோதனைக்கு பின்னர் இன்னொரு கப்பலில் இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவாகியுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இருந்து ஆடு மாடுகளுடன் ஜோர்தானுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்றும் ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக பயணத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.