பராலிம்பிக் – நாட்டுக்கு பெருமையீட்டிய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு!
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி தங்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமித துலான் கொடிதுவக்கு ஆகியோர் இன்று 8 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளனர்.
நாட்டுக்கு பெருமையீட்டி பராலிம்பிக்கில் புதிய சாதனை படைத்தமைக்கு பிரதமர் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரலாற்றை புதுப்பித்து எழுதிய இந்த வெற்றிக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளின் பயிற்சிக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் என்ற இலக்கை பதிவுசெய்து உலக சாதனையை நிலைநாட்டினார்.
F64 ஈட்டி எறிதல் போட்டியில் 65.61 என்ற இலக்கை பதிவுசெய்து சமித துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment