நட்பு நாடுகளின் ஆதரவு எப்போதும் உண்டு!

2 07 37 46 j 1 H@@IGHT 442 W@@IDTH 800

எமது நட்பு நாடுகள் ஜெனிவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது.

ஜெனிவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) ஜெனிவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் எமது நாடு எதிர்கொண்டுவரும் நெருக்கடி என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும். அத்துடன் மனித உரிமைகள் குறித்து நாம் பின்பற்றுகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அதன் பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் நன்கு அறிவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகள் பலரை விடுதலை செய்தார். எஞ்சியுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்வது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை அமைச்சர் அலி சப்ரியும் ஜெனிவாவில் தெளிவாக விளக்கப்படுத்தினார்.

அதேபோல் பயங்கரவாதத்தடை சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியிலும் தற்போது சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்று, அதனை சட்டமாக்கும் நடவடிக்கைகள் நீதி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் எமது நட்பு நாடுகள் பல எமக்கு ஆதரவாக ஜெனிவாவில் வாக்களிக்கவில்லை. இது இலங்கை மீதான மனஸ்தாபத்தில் அல்ல. அந்தந்த நாடுகள் அவர்களின் கொள்கைத்திட்டத்திற்கு அமையவும், சர்வதேச தீர்மானங்களுக்கு அமையவும் முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் அதற்காக இலங்கை தனித்துவிடப்பட்ட நாடல்ல. சகல நாடுகளுடனும் எமது நட்புறவை நாம் பேணி வருகின்றோம். அதன் பலாபலன்களை நாம் அடைகின்றோம். இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல நாம் அனைவரும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான விடயங்களைக் கையாளும் ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது குழுவானது இலங்கையின் தூதுவரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியுமான மொஹான் பீரிஸை அதன் தலைவராக நியமித்தது.ஆகவே ஐக்கிய நாடுகள் சபை எமக்கு எதிராக செயற்படவில்லை. மாறாக ஒருசில விடயங்களை நாம் எதிர்கொள்கின்றோம், அதை தாண்டி எம்மை எதிரியாக எவரும் கருதவில்லை எனவும் தெரிவித்தார்.

#srilankanews

Exit mobile version