இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும், இதற்கு முன்னர் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தில் இருந்து 10 சதவீதத்தினை குறைத்தல் மற்றும், அண்மையில் திருத்தப்பட்ட டீசல் விலையை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 38 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் நள்ளிரவு முதல் அறவிடப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமையான பேருந்து சேவைகளுக்கு மாத்திரமே இவ்வாறு பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. சிசு செரிய மாகாண பேருந்துகள், கெமி செரிய காலை மற்றும் இரவு விசேட பேருந்துகள் மற்றும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பொது பாடசாலை சேவை பேருந்துகளுக்கும் இக்கட்டண திருத்தம் பொருந்தும் .
புதிய கட்டணத்திருத்தங்களுக்கு அமைவாக கட்டணங்கள் அறவிடப்படுகின்றதா என பரிசோதிப்பதற்காக நடமாடும் பரிசோதகர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏதேனுமொரு வகையில் பற்றுச்சீட்டுகளை வழங்காமை அல்லது அதிக கட்டணத்தினை அறவிடின் 1955 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு பதிவு செய்யலாம் – எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment