சீனா கடன்களை வாரி வாரி வழங்கி, அந்நாடுகளின் பொருளாதார மையங்களைக் குறிவைத்து கபளீகரம் செய்யும் நோக்கில் சீனா களமிறங்கியுள்ளது என தற்போது மேற்குலக நாடுகள் கடுமையாக சாடி வருகின்றன.
இந்த நிலையில், மேற்குலகம் கூறக்கூடிய குற்றச்சாட்டுக்களை சீனா முற்றுமுழுதாக நிராகரித்து வருகிறது. சர்வதேசத்தின் கடன் சுமையிலிருந்து இலங்கையை சீனாவே காப்பாற்றி வருவதாக சீனத் தூதரகம் பதிலளித்தது.
இலங்கை மீது மட்டுமல்ல, பல ஆபிரிக்க நாடுகளின் வளையத்திலும் சீனாவின் கழுகுப்பார்வை விழுந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் உகண்டாவை சீனாவின் கடன்பொறி மூழ்கடித்துள்ளது. அவ்வாறு இருக்கையில், இப்படியான பின்புலத்திலேயே இலங்கையையும் மூழ்கடிப்பதற்கு சீனா திட்டம் தீட்டுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி தனது முகநூல் பக்கத்தில் கூட ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.
”ராஜபக்ஸ ஆட்சியை போன்றே, உகாண்டாவின் ஊழல் மிகுந்த அரசியல் தலைமைகளின் முன்னுரிமைகள் மற்றும் தேசிய திட்டமொன்று இல்லாது பணத்தைப் பெறும் பேராசைக் கனவுடன் சீனாவிடமிருந்து பெருமளவிலான தொகை கடனை பெற்றுக்கொண்ட முடிவின் பெறுபேறு இது” என்று அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்புத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, நாட்டிற்கு தேவையற்ற திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், இந்து சமுத்திரத்தின் கடற்படை வழித்தடமாக சீனாவினால் சுவீகரிக்கப்படுகிறது என்பதும் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து.
சீனா கொடுத்த கடனை மீளக் கொடுக்க முடியாத உகண்டாவின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், உகண்டா அரசாங்கத்திடமிருந்து இல்லாது போயுள்ளது என்ற செய்திகள் கடந்த வாரம் வெளியாகியிருந்த போதும், இச்செய்தியை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சர்வதேச விமான நிலையத்தை காப்பாற்றும் பொருட்டு தற்போது உகண்டா திட்டங்கள் பலவற்றைத் தீட்டி வருகிறது எனவும் கூறப்படுகிறது.
சீனாவுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உகண்டா முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகத் தான் செய்கிறது.
இந்தநிலையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட, வெளிநாட்டு கடன் சாரம்சத்தை மேற்கோள்காட்டி, இலங்கையின் கடன் சாரம்சத்தை கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளது.
மேற்குலக நாடுகளின் ”கடன் பொறியிலிருந்து” இலங்கையை சீனாவே காப்பாற்றியது” என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், சீனாவின் சதித் திட்டத்திற்கு முடிவுகட்டும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் களமிறங்கியுள்ளதுடன், அதற்கான திட்டங்களையும் வகுத்துவருகிறது.
சீனாவின் அழுத்தங்களுக்கு எதிராக வகுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகின்றது.
ஆகவே தான் இந்த திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் 300 பில்லியன் யூரோ முதலீடு செய்யப்படுகின்றது.
இந்தநிலையில், இந்தியாவும் இலங்கைக்குள் ஆதிக்கத்தைச் செலுத்த எண்ணுகிறது.
ஆசிய வளையத்தில் சீனாவின் அழுத்தங்களை தவிர்க்கும் வகையில், இந்தியாவினால் புதிய முதலீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்காக, இந்தியா பொருளாதார நிவாரண பொதியொன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலை அபிவிருத்தி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள் இறக்குமதி மற்றும் இலங்கைக்கு நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நிவாரண பொதியில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்படி இலங்கை மீது பல நாடுகளின் கண்பார்வை விழுந்துள்ள நிலையில், இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் (15) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனக்குழுவினர், பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தூதரக அதிகாரிகளின் விஜயத்தால் வவுனியா நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையை முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கும் சீனாவின் திட்டம் ஒருபுறம் இருக்கும் நிலையில், தற்போது சீன அதிகாரிகளின் வருகையால், பருத்தித்துறை முனைப் பகுதிதான் அவர்களது இலக்கு என்று ஒருவிடயம் தெளிவாகிறது.
#Artical
Leave a comment