இலங்கை நிதி அமைச்சின் திறைசேரிப் பிரிவிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனதாகக் கூறப்படும் விவகாரத்தில், இலங்கை மத்திய வங்கிக்கும் (CBSL) நேரடிப் பொறுப்பு இருப்பதாக நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் (COPF) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விபரங்களை வெளிப்படுத்தினார்.
இந்த அறிக்கை தொடர்பான மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாடாளுமன்றக் குழுவிற்கு அறிவிப்பதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு கடன் வழங்குநர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய தவணைப் பணத்தை இணையவழி ஊடுருவல்காரர்கள் (Hackers) போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தித் திசைதிருப்பியதால் இந்த நிதிக்கையாடல் சம்பவம் அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி காரணமாக நாடு தொழில்நுட்ப ரீதியானதொரு நிதித் தவறுதலுக்கு (Technical Default) முகம் கொடுத்துள்ளதா என்ற தீவிர கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்காக நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் அரசாங்க நிதிப் பற்றிய குழு அவசரமாகக் கூடியிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகத் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் நாடாளுமன்றக் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, திறைசேரியினால் தயாரிக்கப்பட்டுள்ள விரிவான விசாரணை அறிக்கை குறித்து நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டது. கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் நாடு பொருளாதார ரீதியாக மீண்டு வரும் இக்கட்டான சூழலில், இவ்வாறானதொரு பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது பலத்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிதிக்கையாடல் விவகாரம் தொடர்பில் முழுமையான குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு அறிவித்துள்ளது. அதேநேரம், மத்திய வங்கி தனது ஒருவார கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்கவுள்ள விளக்க அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு நடவடிக்கைகள் மற்றும் உரிய சட்டப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிப் பரிமாற்றங்களின் போது இவ்வாறான தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பாதுகாப்பு ஓட்டைகள் எவ்வாறு ஏற்பட்டன என்பது குறித்தும் விரிவான தணிக்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன