தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் நிலஅளவைத் திணைக்களத்தினரிடம் அண்மையில் அடையாளம் காட்டியிருந்தார் என்பதுடன், அந்த வீதியை விடுவிக்க வலி வடக்குப் பிரதேசபை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்த நிலையில், இதற்கு எதிராகப் பலாலி காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தநிலையில், அந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, ‘வலி வடக்கு பிரதேசசபை மேற்கொள்ளும் வீதி விடுவிப்பு முயற்சிகளை பொது அமைதிக்குப் பங்கமான செயற்பாடு என்று கருதித் தடைபோட முடியாது’ என நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், பிரதேசசபையால் எப்போது வேண்டுமானாலும் வீதியை விடுவிக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடை விதிக்குமாறு அரசியலமைப்பின் 66ஆம் பிரிவின் கீழ் தெல்லிப்பழை காவல்துறையினர் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பவானி வீதி தொடர்பில் இதற்கு மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மேல் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் காவல்துறையினரிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.