நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள் குழுவொன்று சர்வஜன அதிகாரத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இன்றைய தினம், சர்வஜன அதிகாரத்தின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகமவுடன் இக்குழுவினர் நாவலப்பிட்டியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் விசேட சந்திப்பு ஒன்றினையும் நடத்தியுள்ளனர்.
குறித்த, கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த கே.எல்.ஏ. குணசிங்க, தானும் தனது குழுவினரும் ‘சர்வஜன அதிகாரத்துடன் உத்தியோகபூர்வமாக இணைந்து செயல்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின், இணைப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திலும் அமுனுகம, சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியே நேரடியாகக் காரணம் எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அவ்வாறாயின் நாட்டிற்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்புகழுக்கு மத்தியிலும், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையானது, தற்போதைய அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை தெளிவாக எடுத்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைத்துக் கட்சிகளும் தற்போது அதிக வாக்கு வங்கியிலிருந்து குறைந்த வாக்கு வங்கிக்குச் சரிந்துள்ள போதிலும், சர்வஜன அதிகாரம் மட்டுமே பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி தற்போது மிகவும் வலுவான ஒரு வாக்கு வங்கியை கட்டியெழுப்பியுள்ளது என்றும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.