அரசியல்
ராஜபக்சக்கள்மீது உச்சகட்ட சீற்றத்தில் சுதந்திரக்கட்சி ! – பதிலடி ஆரம்பம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு நேசக்கரம் நீட்டி, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார – கட்சியில் வகித்த அனைத்து பதவிகளை பறிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிரடியாக தீர்மானித்துள்ளது.
இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளர், உப செயலாளர் மற்றும் தம்பதெனிய தொகுதி அமைப்பாளர் பதவிகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்த்தையும் இழந்துள்ள சாந்த பண்டார, விரைவில் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்படுவாரென ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று (12) அறிவிப்பு விடுத்தார்.
தற்போதைய சூழ்நிலையில் கட்சி செயற்பாடுகள் எதிலும் சாந்த பண்டார பங்கேற்கமுடியாது – கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது. அரசியல், மத்திய மற்றும் நிறைவேற்று குழு கூடிய பின்னர் ‘பதவிகளை பறிக்கும்’ முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.
அரச பங்காளிக்கட்சியாக செயற்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த 5 ஆம் திகதி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. கட்சியின் 14 எம்.பிக்களும் சபையில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சி முடிவைமீறி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு ஆதரவை வழங்கி, விவசாயத்துறை இராஜாங்க அமைச்சை சாந்த பண்டார பெற்றுக்கொண்டார்.
” சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் முயற்சி கைகூடாத நிலையில், நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கிலேயே மக்கள் பக்கம் நின்று – மனசாட்சியின் பிரகாரம் அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தேன்.” என்று அறிவித்து கட்சி தாவலுக்கு நியாயம் கற்பித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார்.
தமது கட்சி உறுப்பினரை வளைத்போட்டு, அமைச்சு பதவி வழங்கியதால் ஜனாதிபதிமீது சுதந்திரக்கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.
” அதிகார மோகத்தில், பழைய விளையாட்டை ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர். இதனை அனுமதிக்க முடியாது.” – என சு.க. செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று கடுந்தொனியில் அறிவிப்பு விடத்தார்.
அத்துடன், ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பையும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புறக்கணித்துள்ளது.
#SriLanka #Articcal
You must be logged in to post a comment Login