இந்திய அரசுடன் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது பொருளாதார மற்றும் பாதுகாப்பு நன்மைகளைத் தவிர, ஒரு இறையாண்மையுள்ள நாடான இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதென பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
” மேற்படி உடன்படிக்கைகள் எமது பிராந்திய, கடல்சார் பாதுகாப்புக்கும், கப்பல் பழுதுபார்த்தல் செலவை குறைக்கவும் பாரிய உந்துசக்தியாக அமையும். ” – என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
” இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்படும் மிதக்கும் தளமானது ஆண்டு தோறும் கப்பல் பழுதுபார்ப்பு வேலைகளுக்கு வெளியாருக்கு கொடுக்கப்படும் 600 மில்லியன் ரூபா செலவை மீதப்படுத்தக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத் திட்டமானது 2015ஆம் ஆண்டு முதல் வரைபில் இருந்து வருகின்ற ஒன்றாகும்.
டோர்னியர் உளவு விமானமானது அடிப்படையில் கடல்சார் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும்,தேவையான பல்வேறு தளங்களுக்கு தகவல்களை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதியின்மையே கடந்த இரண்டு வருட காலமாக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையில் இருதரப்பு உரையாடல்களுக்கான காரணமாக அமைந்ததுடன் இலங்கைக்கு ஒரு டோர்னியர் உளவு விமானத்தை இலவசமாக வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய, மேற்படி விமானம் உற்பத்தி செய்யப்படும் வரை அதேபோன்ற ஒரு விமானத்தை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும். இலங்கை விமானப்படையின் விமானிகளாலேயே இந்த விமானம் இயக்கப்படவுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய பயிற்சிக்குழு ஒன்று இலங்கையில் தங்கியிருக்கும். இதன் காரணமாக இலங்கை விமானப் படையினர் மேற்படி விமானத்தை செலுத்தத் தேவையான மேலதிக திறனை பெற்றுக்கொள்ளவர். அதேவேளை, இந்த ஒப்பந்தங்கள் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த உதவியாக அமைவதுடன், பாரிய செலவையும் குறைக்க உதவியாக அமையவுள்ளது.
மேலும், இந்திய அரசின் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் கொழும்பில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதிப்புக்குள்ளான கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்தினுள் பாதிப்புக்குள்ளான கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் இம்மையமானது மிகவும் அவசியமானதாகும்.
உட்கட்டமைப்பு மற்றும் ஆளணி மேம்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நன்மைகளைத் தவிர, ஒரு இறையாண்மையுள்ள நாடான இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என பாதுகாப்பு அமைச்சு உறுதியளிக்கிறது.
#SriLankaNews
Leave a comment