வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி
வடமாகாணத்தில் 30 வயதுக்கு அதிகமானவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாணத்தில் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி முதல் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதுவரையில் மொத்தமாக 32 ஆயிரத்து 844 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் ஓகஸ்ட் மாதத்திலும், 5 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் செப்டெம்பர் மாத முதல் 12 நாள்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578 இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 228 இறப்புகள் ஓகஸ்ட் மாதத்திலும் 169 இறப்புக்கள் செப்ரெம்பர் மாத முதல் 12 நாள்களிலும் இடம்பெற்றுள்ளன.
வடமாகாணத்தில் பெரும்பாலும் தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலே இறப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மக்கள் விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.
Leave a comment