முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்துமாறு பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின் தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 940-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், அண்மைக்காலமாகப் பெறுபேறுகள் கவலைக்கிடமாக உள்ளன.
கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் 77 சதவீதத்திற்கும் அதிகமான பெறுபேறுகள் பெறப்பட்டன.
உரிய கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாததால், இப்பெறுபேறுகள் தற்போது 50 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளன. கூடுதல் வகுப்புகள் இன்மை: குறிப்பாக தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் அல்லது வழிகாட்டல்கள் எதுவும் பாடசாலையினால் வழங்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிபர் நியமனம்: பாடசாலையின் வீழ்ச்சிக்கு தற்போதைய நிர்வாகமே காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ள பெற்றோர்கள், தகுதியான புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரியுள்ளனர். மாணவர்களின் சுகாதாரப் பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர் (Voucher) விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோட்டக்கல்வி அலுவலகம் முதல் வட மாகாண ஆளுநர் வரை முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பின்தங்கிய சூழலில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, கல்வி அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.