கூகுள் நிறுவனம் தனி நபர் கடன் வழங்கும் சுமார் 2 ஆயிரம் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய பயனர்களை போலி தகவல் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் தனி நபர் கடன் வழங்கும் செயலிகள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சட்டத்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை செய்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கூகுள் மட்டுமின்றி இந்திய மத்திய அரசும் சுமார் 300 கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த செயலிகள் பெரும்பாலும் சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் காரணத்தாலேயே தடை விதிக்கப்பட உள்ளது. இவற்றில் பெரும்பாலான செயலிகள் பணம் அபகரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகள் இந்திய பயனர்களை குறிவைப்பது கண்டறியப்பட்டது. இது போன்ற செயலிகள் எதிர்காலத்தில் பிளே ஸ்டோரில் அதிகரிக்காமல் தடுக்க பிளே ஸ்டோர் விதிகளில் மாற்றம் செய்யப்படும் என கூகுள் ஆசியா பசிபிக் பகுதிக்கான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவு மூத்த இயக்குனரும், தலைவருமான சைகித் மித்ரா தெரிவித்து இருக்கிறார்.
#technology
Leave a comment