நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் – 01 தோட்டத்தின் தனிவீட்டுக் குடியிருப்பில் தூக்கில் தொங்கியவாறு 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் – 01 தோட்டப் பாடசாலையில் தரம் 3இல் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் காணப்பட்டுள்ளது.
வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரைக் கம்பத்தில் சேலைப்பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனக் ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம் பெற்ற அன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் எனவும், தாய் மலசலகூடத்துக்குச் சென்றிருந்தார் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
தாய் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்துள்ளதை அவதானித்துக் கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் கழுத்தில் இறுகியிறுந்த சேலைப் பட்டியை அப்புறுப்படுத்திய அயலவர்கள், சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், பரிசோதித்த வைத்தியர், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
#SriLankaNews
Leave a comment