ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (08.04.2022) அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமிழ்க் கட்சிகளும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், பதவியில் நீடிக்கும் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றப்பிரேரணைக்கும், அரசை விரட்டுவதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அரசமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்படும் இவ்விரு
நகர்வுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் தேசியக் கூட்டணியும் ஆதரளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை. சுயாதீன அணிகளின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்காத பட்சத்தில் மேற்படி உறுப்பினர்களும் இவ்விரு நகர்வுகளுக்கும் ஆதரவாக செயற்படக்கூடும்.
#SriLankaNews
Leave a comment