ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு டுபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
முதலீட்டாளர்களை சந்தித்த முதலமைச்சர், அவர்கள் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல முதலீட்டு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியதுணை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் சி.எம்.ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், டுபாயிலிருந்து இன்று மாலை அபுதாபி செல்லவுள்ளார்.
அபுதாபியில் முதலமைச்சருக்கு மிகப்பெரும் வரவேற்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள ‘புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்’க்கு நிதி உதவி வழங்கவுள்ள முதலமைச்சகருக்கு பாராட்டு விழா ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த நிகழ்வு, அபுதாபியிலுள்ள இந்திய சமூக கலாச்சார மைய உள்ளரங்கில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்கிறார்கள்.
நிகழ்வை முடித்துக்கொண்டு முதலமைச்சர் நாளை இரவு இந்தியா திரும்பவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndianNews
Leave a comment