சபாநாயகர்
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாதத் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

Share

பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில் திருத்தங்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறை​வேற்றப்பட வேண்டும் என்று அந்த வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர், சபாநாயகர் அறிவிப்பின்போதே, உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை விடுத்தார்.

அறிவித்தல்

அரசமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்ட ‘பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)’ எனும் தலைப்பிலான சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

‘பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)’ எனும் தலைப்பிலான சட்டமூலத்தின் அரசமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் பின்வருமாறு:-

சட்டமூலத்தின் வாசகம் 2

சட்டமூலத்தின் 2 ஆம் வாசகம் அரசமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாகவில்லை என உயர்நீதிமன்றம் கருதுகின்றது.

சட்டமூலத்தின் வாசகம் 3

அரசமைப்பின் பிரகாரம், சட்டமூலத்தின் 3 ஆம் வாசகத்துக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையானது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்கு (வருகை தராதவர்கள் உட்பட) குறையாதிருந்தாலொழிய அதனைச் சட்டமாக இயற்ற முடியாது என உயர்நீதிமன்றம் கருதுகின்றது.

எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி சட்டமூலத்தின் 3ஆவது வாசகத்தில் உள்ள ஏற்பாடுகள் திருத்தப்பட்டால், அது அரசமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் கருதுகின்றது.

சட்டமூலத்தின் வாசகம் 4

எவ்வாறாயினும், அது அவ்வாறு இருக்கையிலும், சட்டமூலத்தின் 4 ஆம் வாசகத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆம் பிரிவின் உள்ளடக்கத்தில் 141 வது உறுப்புரையை உட்புகுத்துமாறு சட்டமா அதிபர் அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும், மனுதாரர்களின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர் அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் குழுநிலையில் முன்மொழிவார் எனவும் கற்றறிந்த மேலதிக மன்றாடி அதிபதி நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தின் வாசகம் 5

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், சட்டமூலத்தின் 5ஆம் வாசகம் அரசமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாகவில்லை என உயர்நீதிமன்றம் கருதுகின்றது.

சட்டமூலத்தின் வாசகம் 6

அரசமைப்பின் 80 (3) ஆவது உறுப்புரையின் பிரகாரம் எந்தவொரு காரணத்துக்காகவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11 இன் செல்லுபடி பற்றி உயர்நீதிமன்றம் விசாரிக்கவோ, தீர்ப்பளிக்கவோ அல்லது எவ்விதத்திலும் கேள்விக்கு உட்படுத்தவோ ஆகாது என அது கருதுகின்றது.

சட்டமூலத்தின் வாசகம் 10

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி சட்டமூலத்தின் 10ஆவது வாசகம் திருத்தப்பட்டால், அது அரசமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர்நீதிமன்றம் கருதுகின்றது.

சட்டமூலத்தின் வாசகம் 11

சட்டமூலத்தின் 11ஆவது வாசகம் அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டுக்கு முரணானது எனக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாதென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தின் வாசகம் 12

12ஆவது வாசகத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) அது உள்ள வடிவத்தில் அரசமைப்பின் 12(1) ஆவது உறுப்புரைக்கு முரணாக இருக்குமென உயர் நீதிமன்றம் கருதுகின்றது.

123(1)(இ) உறுப்புரையின்படி, உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, சட்ட மூலத்தின் 12ஆவது வாசகத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) இன் ஏற்பாடுகள் திருத்தப்பட்டால், அது அரசமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய நடவடிக்கைகளுக்கான அதிகாரபூர்வ அறிக்கையில் அச்சிட உத்தரவிடுகின்றேன் – என்றார் சபாநாயகர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...