இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்வதும் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடிப்பதும், தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது, இந்நிலையில் கடந்த மாதம் 27 மற்றும் இந்த மாதம் 5 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களையும் படகையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதனைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் இருக்கும் 22 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், அதேபோல 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வேண்டும், பாரம்பரிய இடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் விதமாகவும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று தங்கச்சிமடம் வலசை தெருவில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 15,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
#India
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment