மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் சந்தேகநபர் ஒருவரையும் பெண் சந்தேகநபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஹாலிஎல பகுதியில் வைத்து இன்று முற்பகல் வத்தேகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவர்களில் பெண் சந்தேகநபர், குறித்த சிறுமியின் தாய் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று வத்தேகம யடிராவண வீதியிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில் சிறுமி இருந்த நிலையில், அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தேகம காவல்துறை குழுவினர் சிறுமியை மீட்டு தமது பொறுப்பில் எடுத்தனர்.
முச்சக்கரவண்டியொன்றில் வந்தவர்கள் நேற்று காலை 7.00 மணியளவில் சிறுமியை அந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகித்ததுடன், சிறுமியை அழைத்து வர பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி தொடர்பில் CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபரும் பெண் சந்தேகநபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.