நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை (Pambarakelle) PWD லயன் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. நேற்று (ஏப்ரல் 16) மாலை 7.30 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் திடீரெனப் பரவிய தீ, காற்றின் வேகம் காரணமாகக் குறுகிய நேரத்திற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் மூன்று வீடுகளும் அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவல் குறித்த தகவல் கிடைத்ததும், நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிரதேச மக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போது தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து நுவரெலியா பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.