புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில் மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மூவருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மொத்தம் 7,000 ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட சந்தை பகுதியில், பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எச்சில் துப்பிய மூவர் மீது பொது சுகாதாரப் பரிசோதகரால் (PHI) இன்று (வெள்ளிக்கிழமை) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சந்தையில் மீன் வியாபாரம் செய்த ஒருவரும், பொதுமக்கள் இருவருமாவர்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு மீன் வியாபாரிக்கு 5,000 ரூபா ஏனைய இருவருக்கு தலா 1,000 ரூபா வீதம் 2,000 ரூபா தண்டம் விதித்துள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகளில் ஈடுபடும் பட்சத்தில், அபராதத்துடன் சேர்த்து குறிப்பிட்ட காலத்திற்கு சமூக சேவை (Social Service) செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிமன்றம் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் தூய்மையைப் பேணுமாறும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தவிர்க்கும் வகையில் பொறுப்புடன் நடக்குமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

