குடும்பஸ்தரின் மரணத்திற்கு பொலிஸாரே காரணம்: பொலிஸ் நிலையத்தை சூழ்ந்த மக்கள்

Death 1

இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய, பனாமுர பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

பனாமுர பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 38 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை, அடிப்படையாகக்கொண்டு நீதிகோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொது மக்கள், சுயாதீன விசாரணையை கோருகின்றனர்.

குடும்ப தகராறு தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் 38 வயதான குறித்த நபர் நேற்றிரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை காலை 3.30 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் மரணத்துக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ரயர்களும் கொளுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனே, பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இந்த குற்றச்சாட்டை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துள்ளார். சிறைக் கூண்டுக்குள் உள்ள கம்பியில் தொங்கி அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Exit mobile version