சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான தற்காலிகத் தடை விலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்கான புதிய பொது உரிமத்தை (General License No. 134B) அமெரிக்கத் திறைசேரி திணைக்களம் நேற்று (ஏப்ரல் 17) நள்ளிரவு உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.
ரஷ்யா மற்றும் ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடை விலக்குகள் நீடிக்கப்படாது என அமெரிக்கத் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 15) திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மார்ச் 11-ஆம் தேதிக்கு முன்னர் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல்களுக்கான சலுகை ஏற்கனவே முடிந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார். இருப்பினும், உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களைக் கருத்திற்கொண்டு, டிரம்ப் நிர்வாகம் இந்தத் தீர்மானத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய உத்தரவின்படி, நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றிய கப்பல்கள், எதிர்வரும் மே மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவு வரை எவ்விதத் தடையும் இன்றித் தமது விநியோகப் பணிகளை முன்னெடுக்க முடியும். இந்த ஒரு மாத கால நீட்டிப்பு இந்தியா மற்றும் சீனா போன்ற ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி அதிர்ச்சியைச் சமாளிக்க இது அவசியமான நடவடிக்கை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் இந்த நகர்வு உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் வருமானத்தைத் தடுப்பதாகக் கூறிவிட்டு, இத்தகைய சலுகைகளை வழங்குவது ரஷ்யாவிற்குப் போருக்கான நிதியைத் திரட்ட உதவும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், உள்நாட்டில் எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் டிரம்ப் நிர்வாகம் இராஜதந்திர ரீதியாக இந்தத் தடை விலக்கை நீடித்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

