தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அரசியல் கைதி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிருபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை – அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன் (வயது 29) என்ற அரசியல் கைதியே நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இருப்பினும் கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எவையும் தாக்கல் செய்யப்பட்டவில்லை.
இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் நீதிமன்றில் இவ் விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டி வாதிட்டார். அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளது.
கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த அரசியல் கைதி, நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்று மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட இவர் தனது குடுப்பத்துடன் இணைந்துள்ளார் என, அவரது குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
Leave a comment