கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை எதிர்வரும் 20-ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2025 நவம்பர் 29 அன்று ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்குச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியின்றி உணவு வழங்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுத்த கிராம அலுவலர் (Grama Niladhari) மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கிராம அலுவலரால் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இன்று பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட கிராம அலுவலர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வொன்றில் பங்கேற்க வேண்டியிருப்பதால் அவரால் வரமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், பொலிஸ் பிணையில் உள்ள ஒருவர் நீதிமன்றத் தவணையின் போது நேரில் முன்னிலையாவது கட்டாயமானது என்றும், வராதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பதில் நீதவான், வழக்கை எதிர்வரும் ஜனவரி 20-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனைத் தவறாது நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்குக் கட்டளை பிறப்பித்தார்.