டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த நிலையில், கொவிட் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் அவர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்தனர்.
இந்தநிலையில், அவுஸ்திரேலிய ஒபனில் பங்குபெற்றுவதற்கு அனுமதிக்குமாறு கோரி டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.
விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
ஆனால், குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனது தனிப்பட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி விசாவை இரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் இரத்து செய்துள்ளார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SportsNews

