சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகப் புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 02.01.2026 அன்று இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக ரஞ்சித்குமார் கடமையாற்றிய காலப்பகுதியில், அங்கிருந்த நீதிமன்றக் களஞ்சியசாலையிலிருந்த சான்றுப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்தே, நீதிவான் ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ள நூர்டீன் முஹம்மட் சர்ஜுன், எதிர்வரும் திங்கட்கிழமை (ஜனவரி 05) தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நீதிவான் ரஞ்சித்குமார், மட்டக்களப்பில் திருமணம் முடித்து களுவாஞ்சிக்குடி மற்றும் சம்மாந்துறை நீதிமன்றங்களில் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.