“கச்சா எண்ணெயை வாங்க மறுத்தால் ஜேர்மனிக்குச் செல்லும் எரிவாயு குழாய்களைத் துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.”
– இவ்வாறு உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.
அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியப் பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஐரோப்பிய யூனியனின் செயற்பாடுகளால் ஆத்திரமடைந்த ரஷ்யத் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
“ஐரோப்பிய கூட்டமைப்பு ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியப் பொருட்கள் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யாவும் அதற்குப் பதிலடி கொடுக்கும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துவோம்.
குறிப்பாக ஜேர்மனிக்குச் செல்லும் எரிவாயு குழாய்களைத் துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.
ரஷ்யாவிடம் இருந்துதான் ஐரோப்பிய கூட்டமைப்பின் பெரும்பான்மை நாடுகள் பெற்றோலியப் பொருட்களை வாங்குகின்றார்கள். எங்கள் மீது தடை விதித்தால், பாதிக்கப்படுவது நீங்களும்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
இதனைப் புரிந்துகொண்டு இது போன்ற தடைகளை விதிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – என்றார்.
ரஷ்யாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவின் யோசனையை ஜேர்மனி நிராகரித்துள்ளது. அமெரிக்கா கூறுவதுபோல் ரஷ்யாவிடம் இருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்தினால், பெற்றோலியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விடும். எனவே, இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஜேர்மனி விரும்பவில்லை என்று கூறியுள்ளது.
நெதர்லாந்து நாடும் இதே முடிவை எடுத்துள்ளது. ஜேர்மனி, நெதர்லாந்து நாடுகளின் முடிவால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
#World News
Leave a comment