ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ஒருவரின் வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில், சந்தேகநபரான கான்ஸ்டபிள் அந்த வங்கி அட்டையைப் பயன்படுத்தி சொகுசு மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதும், மேலும் ஒரு சுப்பர் மார்க்கெட்டில் பெருமளவிலான பொருட்களைப் கொள்வனவு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. கைதான நபரின் வங்கி அட்டையை முறையற்ற விதத்தில் கையாண்ட இந்தச் செயல், பொலிஸ் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடிச் செயலில் குறித்த கான்ஸ்டபிளுக்கு உதவியாகச் செயல்பட்ட ஏனைய நபர்களையும் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் மேற்பார்வையில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேராவின் வழிகாட்டலில் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.