2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு (Geopolitical agendas) அமைவாகவோ முன்னெடுக்கப்படக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது ‘X’ சமூக வலைதளப் பதிவின் ஊடாக அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது முன்னெடுக்கும் விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி கோரும் இந்த விசாரணைகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும், பக்கச்சார்பற்ற முறையிலும் நடைபெற வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், அத்தகைய உண்மையான விசாரணைக்குத் தனது முழுமையான ஆதரவு உண்டு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, அவரை ஒரு கௌரவமான இராணுவ அதிகாரி என்று வர்ணித்துள்ளார். முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் சுரேஷ் சலே ஆற்றிய சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்பில் அவர் வகித்த முக்கிய பங்கு பாராட்டுக்குரியது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திட்டமிட்ட அரசியல் அழுத்தங்கள் மூலமே, காலப்போக்கில் சுரேஷ் சலேவை இந்தத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி போலியான கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உண்மையில் தாக்குதல் தொடர்பாகத் தமது கடமைகளைச் செய்யத் தவறிய நபர்கள் மீது இவ்வாறான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் நீதி வழங்கல் போன்ற மிக முக்கியமான விவகாரங்கள், குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என்பதே அவரது கருத்தாக உள்ளது. தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவருவதில் அரசாங்கம் காட்டும் அக்கறை, உண்மையான குற்றவாளிகளைப் பிடிப்பதில் இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.