05 2
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி மற்றும் இணைய சேவைகள் முடக்கம்

Share

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் (Amazon Web Services – AWS) நிறுவனத்தின் தரவு மையங்கள் (Data Centers) மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் பிராந்தியத்தின் டிஜிட்டல் கட்டமைப்பைச் சீர்குலைத்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு முக்கிய தரவு மையங்கள் மற்றும் பஹ்ரைனில் உள்ள ஒரு மையம் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் காரணமாகத் தரவு மையங்களின் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், மின்சார விநியோகமும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வங்கிச் சேவைகள், முக்கிய இணையத்தளங்கள் மற்றும் பல கைப்பேசி செயலிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. குறிப்பாக, அபுதாபி மற்றும் துபாயின் முன்னணி வங்கிகளின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் செயலிழந்துள்ளதால், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்ட நீரினால், அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களுக்கு மேலதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு வலயத்தில் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும், தங்களின் தரவுகளை உடனடியாக ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற பாதுகாப்பான வலயங்களுக்கு (Safe Regions) மாற்றுமாறு (Data Migration) நிறுவனம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமொன்றின் உட்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட இந்த இராணுவத் தாக்குதல், டிஜிட்டல் உலகின் பாதுகாப்புக் குறித்த புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியத்தின் டிஜிட்டல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மீட்புப் பணிகளை அமேசான் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், போர் பதற்றம் தணியாத வரை சேவைகளை முழுமையாகச் சீரமைப்பதில் சவால்கள் நீடிக்கும் என்று சர்வதேசத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...