கொரோனா பேரிடருக்குப் பிறகு உலகை காப்பாற்றும் வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாடு இந்த மாத இறுதியில் கிளாஸ்கோவில் ஆரம்பிக்க உள்ளது.
காலநிலை மாற்றங்கள் தொடர்பாக உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது,
இன் நிலையில் கார்பன் வெளியீடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அவ்வறிக்கையில் காலநிலை மாற்றத்துக்கு எதிரான உறுதிமொழிகளை உலகநாடுகள் பின்பற்றாவிட்டால் புவிவெப்பநிலை உயர்வால் ஏற்படப்போகும் பேரிடர்களை தவிர்க்க முடியாது என ஐநா எச்சரித்துள்ளது.
உலகநாடுகள் வழங்கியுள்ள தற்போதைய காலநிலை மாற்றத்திற்கான உறுதிமொழிகளின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் வெறும் 7.5 சதவிகிதம் கார்பன் அளவை மட்டுமே குறைக்க முடியும் என தெரிவித்துள்ள ஐநா புவி வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்க 45 சதவிகித கார்பன் அளவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது 100 நாடுகள் இந்த நூற்றாண்டின் மத்தியில் பூஜ்ய கார்பன் வெளியீடு குறித்த உறுதிமொழியை வழங்கியிருந்தாலும் அவர் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் பேரிடர்களைத் தடுக்க உதவப்போவதில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சூழலியல் திட்டத்தின் இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், “காலநிலை மாற்றம் என்பது எதிர்கால பிரச்னை அல்ல. அது தற்போது நடந்து வரும் பிரச்னை. புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்க எட்டு வருடங்கள் உள்ளன.
இந்த எட்டு ஆண்டுகளில் சரியான திட்டங்களை உருவாக்கி, கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செயல்படுத்தினால் காலநிலை மாற்ற பாதிப்பை குறைக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கங்களின்போது கார்பன் உமிழ்வு சுமார் 5.4% குறைந்தது. ஆனால் பொருளாதார மீட்புக்கான செலவில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே கார்பனை குறைக்கும் முயற்சிகளுக்கு உதவியது.
கொரோனவிற்கு பிறகு உலகத்தை மீட்பதற்கான வாய்ப்புகளை உலக நாடுகள் தவற விட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
#WORLD
Leave a comment