இலங்கை மக்களின் விருப்பங்கள் நிறைவேறும்! – ரணிலுக்கு மோடி வாழ்த்து

ranil modi..

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துக் கடிதத்தில்,

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கு நெருக்கடியான காலத்தில் நீங்கள் இந்தப் பதவியை ஏற்று இருக்கிறீர்கள்.

உங்களின் பதவிக்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதுடன் இலங்கையின் அனைத்துக் குடிமக்களின் விருப்பங்களும் நிறைவேறும் என நான் நம்புகிறேன்.

இலங்கையில் நிறுவப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான தேடலுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், ஜனாதிபதியாகவிருந்த கோட்டபாய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக செயற்பட்டு வந்த ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் அதிக வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews #India

Exit mobile version