மே 09 ஆம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல் வாதிகளையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” மே – 09 சம்பவத்தின் பின்னர் அரசியலுக்கு வருவதற்கு புத்திஜீவிகள் அஞ்சுகின்றனர். இதற்கான பாதுகாப்பு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆயுத பலம் இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபடும் நிலை உருவாகும். சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.
வன்முறைச் சம்பவங்களுடன் அரசியல் கட்சிகளின்கீழ் மட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டுள்ளனர். மொட்டு கட்சியினரும் தொடர்புபட்டுள்ளனர். தனிப்பட்ட தேவை மற்றும் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செயற்பட்டிருக்கலாம்.
விசாரணைகளின் பின்னர் கட்சிகளில் இருந்து அவர்களை நீக்கலாம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றேன். ” என்றார்.
#SriLankaNews
Leave a comment