கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு விதவிதமான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் எமது மக்களுக்கும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன பிரயோசனம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா தெரிவித்தார்.
இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் பிரச்சினை, மின்சார நெருக்கடி போன்றவை நாட்டின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் எமது வடக்கு கிழக்கு தமிழர்கள் இதைவிட பெரியளவிலான பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வந்தவர்களே.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது. 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினரையும் இன்று வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்.
கடந்த காலத்தில் எமது குழந்தைகள் கஞ்சியை பெறுவதற்கான வரிசையில் நின்றபோது அதைக்கூட நிற்க விடாது குண்டுகளாலும் கிபிர்களாலும் தாக்குதல் நடத்தியதை யாரும் மறந்திருக்க நியாயமில்லை.
இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட உயிராபத்தை தடுப்பதற்காக ஒட்டுமொத்தமாக அப்போதிருந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்திருந்தால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. அனைவரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒழித்து வாழ்ந்தார்கள். இதனால் மக்களை அழிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் இந்த கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு வித விதமான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது மக்களுக்கும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன பிரயோசனம் ஏற்படும் என்பதே எமது கேள்வி.
நல்லாட்சி என்று கொண்டுவரப்பட்ட அரசாங்கம் இருக்கும் வேளையில் மேற்கத்தைய நாடுகள் எமது போராட்டத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஜெனீவாவில் காலக்கெடு வழங்க வேண்டாம் என்று கூறியும் கூட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதேச்சாதிகாரமாக அந்தக் கால நீடிப்பை வழங்கி ஒத்துழைத்திருந்தனர்.
ஜனாதிபதி பதவியை ஒழிப்பதால் எமக்கு என்ன கிடைக்கப் போகிறது. சிங்களவர்களுக்கு உதவி செய்வதாக மட்டுமே இருக்கும். பிரச்சினை நாளை தீர்ந்துவிட்டால் அவர்கள் எம்மை அம்போ என்று கைவிட்டு தமது பாட்டை பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள்.
அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச மத்தியஸ்தத்துடன் சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் மத்தியில் நடத்த வேண்டும். அதை வேறு எந்த கட்சிகளும் தீர்மானிக்க முடியாது – என்றார்.
#SriLankaNews
Leave a comment